Wednesday 15 July 2015

தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளான விடுதலைப் புலிகள் தீவிரவாதிகளா??

தமிழீழ விடுதலைப் போராட்டம் ஏன் தொடங்கியது, விடுதலைப் புலிகள் எவ்வாறு உருவாகினார்கள், அவர்கள் எங்கிருந்து உருவாகினார்கள், அவர்களின் போராட்ட வரலாறு என்ன, அவர்கள் எதற்காகப் போராடினார்கள்? என்று தெரிந்தும் சில அடிவருடிகள் சந்தர்ப்பத்திற்கேற்ப பச்சோந்திகளாக மாறி….. “விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தீவிரவாத இயக்கம்” என சிங்களவர்களுடன் சேர்ந்து அறிக்கைகள் விட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

இறுதி யுத்தத்தில் நிராயுதபாணிகளாக அந்த யுத்த களத்திலே நின்றிருந்த போராளிகளையும், பொதுமக்களையும் இனம் காண முடியாத சிங்கள இராணுவம், அங்கே தலைமுடி கத்தரிக்கப்பட்டிருந்த சில பெண் போராளிகளை இனம் கண்டு கைது செய்துதான் அவர்களூடாக அவர்களுக்குத் தெரிந்த மற்றைய போராளிகளை கைது செய்ய முடிந்தது. சில போராளிகள் யுத்த களத்தில் காயம் அடைந்திருந்த வேளையில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். சில போராளிகள், சில தளபதிகள் சிங்கள அரசப் படைகளை எதிர்த்து கண்ணுக்கு எட்டும் தூரம் வரை நின்று போராடியிருக்கிறார்கள். சிங்களப்படைகள் நெருங்க நெருங்க துப்பாக்கி ரவைகள் முடியும் வரை நின்று போராடியிருக்கிறார்கள். அவர்கள்தான் அங்கே உடனடியாக கைது செய்யப்பட்டு அந்தந்த இடங்களில் வைத்தே உடனடியாக பழி தீர்க்கப்பட்டவர்கள் ஆவார்கள்..!

உலகில் எந்த யுத்த களத்திலும் அதியுச்ச போர் நடந்து கொண்டிருக்கும் ஒரு குறுகலான சிறிய இடத்தில் வைத்து அந்தப் போராட்ட வேளையிலே யுத்த கோரத்தாண்டவங்களை நேரடியாக எவரும் ஒலிப்பரப்பு செய்து கொண்டிருக்க மாட்டார்கள்.


ஆனால், விடுதலைப் புலிகளோ… கடும் யுத்தம் நடந்து கொண்டிருக்கையில், ஒரு சிறிய சரக்கு வாகனத்தில் வைத்து தவபாலன் (இறைவன்) என்ற போராளி தான் சுடப்பட்டு இறக்கும் வரை “புலிகளின் குரலை” இறுதி வரை ஒலிக்கச் செய்து கொண்டிருந்தார். அவ்வாறு சில போராளிகளும் பட ஒளிப்பதிவுகள் செய்தமையால்தான் மக்களின் பேரவலங்கள் இன்று உலகின் பார்வைக்கு வந்தது! பின்னால், சிங்கள இராணுவ வீரர்கள் தங்கள் கைகளில் அகப்பட்ட இளைஞர்கள், யுவதிகளையும், சில போராளிகளையும், பன்னிரெண்டு வயதேயான பாலச்சந்திரனையும் சுட்டுக்கொல்வதை தங்கள் கைபேசியூடாக படம் பிடித்து வைத்திருந்ததை சில சுயலாபங்களுக்காக வெளியிட்டிருந்தனர்.



மக்களோடு மக்களாக முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போராளிகளை இனம் காண சிங்களப் படைகளால் முடியாமல் போகவே, சில பொது மக்களை பிடித்து துன்புறுத்தி மிரட்டியதால் அந்த மக்கள் மூலம் சில போராளிகள் இனம் காணப்பட்டார்கள். சிலரை ஒலிபெருக்கிகள் மூலம் “சரணடையுமாறு” அறிவுறுத்தப்பட்டுக் கொண்டிருக்கையில் தங்கள் பெற்றோர்கள், உற்றார் உறவினர்கள் தங்களால் பாதிப்படையக்கூடாது என்பற்காக தாங்களாகவே முன் வந்து சரணடைந்தார்கள். சில போராளிகளுக்குத் தெரிந்தவர்கள், உறவினர்கள் இல்லாததால் அவர்கள் சரணடையாமல் மக்களோடு மக்களாகவே வாழ்கின்றனர். இக்கருத்துக்களை ஏன் இங்கே பதிவு செய்கிறேன் என்றால், “மக்கள் வேறு, புலிகள் வேறு” என்று புலம்பிக் கொண்டிருக்கும் சில சர்வதேச பரப்புரையாளர்களுக்கு தெளிவுபடுத்தத்தான்.



இனியாவது புரிந்து கொள்ளுங்கள்… அங்கே, இறுதிவரை போராடியது அங்கே வாழ்ந்து கொண்டிருந்த ஈழமக்களுக்குச் சொந்தமான புலிகள்தான் என்று! இனி ஒரு போதும் மக்களையும் புலிகளையும் பிரித்து எந்த சக்திகளாலும் இனம் காணமுடியாது!.



இவைகள் ஒரு புறமிருக்க, விடுதலைப் புலிகளின் பலத்தையும், அவர்களுக்கு சர்வதேச ரீதியாக எழுந்த பேராதரவையும் பார்ப்போம்.



இராணுவக் கட்டமைப்புடன் நின்றுவிடாமல்… எந்தவிதமான வெளிநாட்டு உதவிகளுமின்றி எந்த நோக்கத்திற்காக விடுதலைப் போராட்டத்தை ஆரம்பித்தார்களோ… அந்த நோக்கத்தின் அடிப்படையில் மக்களுக்கு நீதியான, நியாயமான, சுதந்திரமான, பாதுகாப்பான நல்லாட்சி வழங்கும் நோக்கிலே பல அமைப்புக்களையும், பல உள்கட்டுமானங்களையும் உருவாக்கினார்கள். பிறந்த குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை அனைவருக்கும் சென்றடையக்கூடிய சகலவிதமான நலத்திட்டங்களையும் உருவாக்கினார்கள்.



காவல்துறையில் இருந்து நீதிமன்றுகள், வங்கிகள், தொலைக்காட்சி சேவைகள், வானொலி சேவைகள், பத்திரிகைகள் என ஓர் அரசாங்கத்திற்குத் தேவையான… இன்னும் ஏராளமான கட்டமைப்புக்களை உருவாக்கியிருந்தனர். உலக வரலாற்றில் தனித்தனி நாடுகள் வைத்து அரசாங்கம் நடத்திக் கொண்டிருக்கும் எத்தனையோ நாடுகள் வறுமை, வரட்சி, உணவுப் பஞ்சம், கலாச்சார சீரழிவு மற்றும் மக்களை கட்டுக்கோப்புக்குள் வைத்திருக்க முடியாமல், அந்த மக்களே அரசைக் கலைத்து ஆட்சிக் கவிழ்ப்பு செய்த வரலாறுகளும் நிறைய உண்டு! இந்த நாடுகளுக்கெல்லாம் பலநாட்டு உதவிகள் கிடைத்தும், தனிநாடு, தனி அரசாட்சி என்று இருந்தும் அங்கு எல்லாக் கொடுமைகளும் இன்றும், இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது!



உலக நாடுகளின் பாரிய உதவிகளுடன் இலங்கை அரசாங்கம் பல தடைகளைப் போட்டு ஒரு சிறுபான்மை இன மக்களை நசுக்கிக் கொண்டு வர, அந்த மக்களே விழிப்படைந்து, எழுச்சியடைந்து எந்த நாட்டு உதவிகளுமின்றி விடுதலைப் புலிகளாக உருவாகி திருப்பித் தாக்கத் தொடங்கி கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக போராடி தமக்கான ஒரு சுதந்திர தேசத்தை உருவாக்கியிருந்தார்கள்.



பூகோள ரீதியாக இந்தியா தவிர வேறு எந்த நாடுகளும் அருகினில் இல்லை. இந்தியா கூட கடல் கடந்துதான் இருக்கிறது! உதவிகள் கேட்டு ஓடவும், உயிரைப் பாதுகாக்க வேறு இடங்களில் போய் பதுங்கிக் கொள்ளவும் எந்தவிதமான பாரிய இடங்களும் இல்லை! ஒரு சிறிய தேசம் அது! அந்தச் சின்னஞ்சிறிய தேசத்தில் துறைமுக வசதிகள் இல்லை, விமானத்தளங்கள் இல்லை, சீரான போக்குவரத்து வசதிகள் இல்லை, எரிபொருள் வளங்கள் இல்லை, எந்தவிதமான மூலவளங்களும் இல்லை..! பல நெருக்கடிகள், பொருளாதாரத் தடைகள், பலநாட்டு மறைமுக அழுத்தங்கள் இன்னும் நிறைய இருந்தும்…. எப்படி உலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு ஒரு விடுதலைப் படையை உருவாக்கி முப்படைகளையும் கட்டியமைத்து தனியாக ஒரு தேசத்தை உருவாக்கி (ஐக்கிய நாடுகள் சபை ஏற்றுக் கொள்ளாதது மட்டும்தான்) தனி அரசாங்கத்தை நடத்திக் காட்ட முடிந்தது?



விடுதலைப் புலிகளை “தீவிரவாதிகள்” என்று விமர்சித்து கொச்சைப்படுத்துபவர்களே…! உங்கள் சுயமூளையுடன் சற்று சிந்தியுங்கள்..!



உலகம் தோன்றிய காலம் முதல் இன்று வரையும் உலகில் எந்த விடுதலை அமைப்புக்களும் விடுதலைப் புலிகள் போல் வளர்ந்ததும் இல்லை!, வாழ்ந்ததும் இல்லை!



இந்த இருபத்தியோராம் நூற்றாண்டுவரை உலகில் எந்த விடுதலை அமைப்பு, விடுதலைப் புலிகள் போல் போராடினார்கள்?



■ உலகில் வாழும் எந்தவொரு விடுதலை அமைப்பும் தனக்கென தனியாக இராணுவச் சீருடைகளை அணிந்ததில்லை!



■ உலகில் வாழும் எந்தவொரு விடுதலை அமைப்பினரும் தங்களது படை நடவடிக்கைகளுக்கு பெயர் சூட்டி அழைத்ததில்லை!



■ உலகில் வாழும் எந்தவொரு விடுதலை அமைப்பினரும் போரில் இறந்த தங்கள் வீரர்களுக்கு தனியாக இடம் ஒதுக்கி கல்லறைகள் (துயிலும் இல்லங்கள்) கட்டியதில்லை!



■ உலகில் எந்தவொரு விடுதலை அமைப்பும் முப்பதாயிரத்துக்கு மேற்பட்ட வீரர்களை இழந்ததில்லை!



■ உலகில் எந்தவொரு விடுதலை அமைப்பினரையும் உலக அரங்கில் பேச்சுவார்த்தைகளுக்கு சர்வதேச நாடுகள் அழைத்ததில்லை!



■ உலகில் எந்தவொரு விடுதலை அமைப்பினருக்கும் ஏராளமான சமூக, போராட்ட, செய்தி இணையத்தளங்கள் இருந்ததில்லை!



■ முகநூல்களிலும் (facebook) வேறு சமூக, செய்தி இணையத்தளங்களிலும் தலைவர் பிரபாகரன் பற்றியும், விடுதலைப் புலிகள் போராட்டம் பற்றியும் முக்கியத்துவம் கொடுத்து செய்திகள் வந்தது போல், வேறு எந்த விடுதலை அமைப்பினர் பற்றியும் பரவலாக செய்திகள் வந்ததில்லை!



■ விடுதலைப் புலிகளுக்கு உலகினில் வாழும் அனைத்து தமிழர்களிடமும் இருந்து கிடைக்கப் பெற்ற பெரும் செல்வாக்கு போல், உலகினில் வாழும் வேறு எந்த விடுதலை அமைப்புக்கும் கிடைத்ததில்லை!



■ விடுதலைப் புலிகள் தீவிரவாத இயக்கம் என்றால்… எப்படி முப்படைகளையும் கொண்ட மரபுவழி இராணுவமாக வளர முடிந்தது? அது எப்படி சாத்தியாமானது?



■ அவர்கள் தீவிரவாதிகள் என்றால், எப்படி மக்களின் பெரும்பலம் அவர்களுக்குக் கிடைத்தது?



பிறகு ஏன் விடுதலைப் புலிகளை முப்பதிற்கும் மேற்பட்ட நாடுகள் சேர்ந்து அழிக்க வந்தன…? அந்த சிறிய தேசத்தில் இருந்து அவர்கள் வளர்ந்த அசுர வளர்ச்சிதான் காரணம்! அவர்களின் வளர்ச்சியை ஜீரணித்துக் கொள்ள முடியாத இந்தியா உட்பட சர்வதேச நாடுகள் அவர்களையும், அவர்களின் போராட்டத்தையும் அழித்து விட முடிவு செய்து, போர் தொடுத்து மக்களை துடிக்கத் துடிக்க கொன்று குவித்து, போராளிகளை கொன்றும், சில போராளிகளைக் கைது செய்தும் சகல இடங்களையும் கைப்பற்றினார்கள். ஆனால், அவர்களுக்குக் கிடைத்ததோ விடுதலைப் புலிகளின் சில ஆயுதங்கள் மட்டுமே! அவ்வாறெனில் சில நூற்றுக்கணக்கான தளபதிகளும், பல ஆயிரக்கணக்கான போராளிகளும் எங்கே போனார்கள்? அவர்கள்தான் அங்கிருந்த தமிழ் பேசும் மக்கள் என்பதை இன்றுவரையும் விடுதலைப் புலிகளை “தீவிரவாதிகள்” என்று சொல்லும் பலர் ஏற்றுக்கொள்வதில்லை!



இன்று வரையும் சில சர்வதேச நாடுகளாலும், சில விசக்கிருமிகளாலும் “தீவிரவாதி” என்றழைக்கப்படும் தலைவர் பிரபாகரன் அவர்கள் ஒரு தனி மனிதனாக ஒரு விடுதலைப் படையை உருவாக்கி, மக்களுக்கான பல நன்மைகளும், பயன் பெறக்கூடியதுமான பல உள்கட்டமைப்புக்களை உருவாக்கினார்.



அந்த உள்கட்டமைப்புக்கள் பின்வருமாறு:



■ தமிழீழ காவல்துறை, குற்றத் தடுப்புக் காவல் துறை, குற்றப் புலனாய்வுப் பிரிவு.



■ தமிழீழ வைப்பகம்.



■ தமிழர் புனர்வாழ்வுக் கழகம்.



■ தமிழர் புனர்வாழ்வு அபிவிருத்திக் கழகம்.



■ சமூக பொருளாதார அபிவிருத்தி வங்கி.



■ கிராமிய அபிவிருத்தி வங்கி.



■ அனைத்துலகச் செயலகம்.



■ நந்தவனம் (வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்புவோர்களுக்கான தொடர்பாடல் சேவை மையம்)



■ சுங்க வரித்துறை.



■ தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக் கழகம்.



■ அரசறிவியற் கல்லூரி.



■ வன வளத்துறை.



■ தமிழீழ நிதித்துறை.



■ தமிழீழ நீதித்துறை, நீதிமன்றுகள்.



■ கலை பண்பாட்டுக்கழகம்.



■ மருத்துவப் பிரிவு.



■ திலீபன் சிறப்பு மருத்துவமனை.



■ பொன்னம்பலம் நினைவு மருத்துவமனை.



■ மருத்துவ ஆராய்ச்சிப் பிரிவு.



■ சுகாதாரப் பிரிவு.



■ ஆவணப்படுத்தல், பதிப்புத்துறை, வெளியிட்டுப் பிரிவு.



■ போக்குவரத்து கண்காணிப்புப் பிரிவு.



■ நிர்வாக சேவை.



■ அனைத்துலக தொலைத்தொடர்பு செயலகம்.



■ மீன்பிடி வளத்துறை.



■ விழிப்புக்குழு (கிராமங்களுக்கான இரவுப் பாதுகாப்பு)



■ தொழில் நுட்பக் கல்லூரி.



■ சூழல் நல்லாட்சி ஆணையம்.



■ தமிழீழ பொறியியல் தொழில்நுட்ப வளர்ச்சித்துறை.



■ தமிழீழ விளையாட்டுத்துறை.



■ தமிழீழ காலநிலை அறிவுறுத்தல் வாரியம்.



■ தமிழீழ போக்குவரவுக் கழகம்.



■ மனிதவள செயலகம் (தமிழீழ கிராம சேவகர் பிரிவு).



■ வளங்கள் பகுதி.



■ மக்கள் தொடர்பகம் (மக்கள் குறை நிறைகளை தலைவரிடம் கொண்டு செல்லும் பிரிவு)



■ விலங்கியல் பண்ணைகள்.



■ விவசாயத் திணைக்களம்.



■ தமிழ்மொழி காப்பகம்.



■ தமிழீழ சட்டக்கல்லூரி.



■ தமிழீழ கல்விக் கழகம்.



■ தமிழீழ கல்வி மேம்பாட்டுப் பேரவை.



■ காந்தரூபன் அறிவுச்சோலை (ஆதரவற்ற ஆண் குழந்தைகளுக்கானது).



■ செஞ்சோலை (ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கானது).



■ செந்தளிர் (ஐந்து வயதிற்குட்பட்ட ஆதரவற்ற குழந்தைகளுக்கானது).



■ வெற்றிமனை (வலுவிழந்தோருக்கானது)



■ அன்பு முதியோர் பேணலகம்.



■ இனிய வாழ்வு இல்லம். (காது கேளாத, வாய் பேசாத, பார்வை இல்லாத ஊனமுற்ற சிறுவர் சிறுமிகளுக்கானது)



■ சந்தோசம் உளவள மையம் (மனநோயாளிகளுக்கானது).



■ நவம் அறிவுக்கூடம் (பார்வை இழந்த போராளிகளுக்கானது)



■ மயூரி இல்லம் (இடுப்பின் கீழ் வலுவிழந்த பெண் போராளிகளுக்கானது)



■ சீர்திருத்தப் பள்ளி.



■ முரளி முன்பள்ளி (ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான ஆரம்பப் பள்ளி).



■ புனிதபூமி மகளிர் காப்புத்திட்டம்



■ உதயதாரகை (விதவைகளுக்கானது).



■ பெண்கள் மறுவாழ்வு அபிவிருத்தி மையம்.



■ பசுமை வேளாண் சேவை (விவசாயிகளுக்கானது).



■ எழுகை தையல் பயிற்சி மையம்.



■ மாணவர் அமைப்பு.



■ பொத்தகசாலை (அறிவு அமுது).



■ ஒளிப்பட பதிவுப் பிரிவு. திரைப்பட வெளியிட்டுப் பிரிவு.



■ நிதர்சனம் (திரைப்படத் தயாரிப்பு).



■ தர்மேந்திரா கலையகம் (திரைப்பட கலைகள் சம்மந்தமானது).



■ விடுதலைப்புலிகள் செய்தி இதழ்.



■ சுதந்திரப் பறவைகள் (பெண்கள் செய்தி இதழ்).



■ ஈழநாதம் (தினச்செய்தி பத்திரிக்கை).



■ வெளிச்சம் (மாத சஞ்சிகை).



■ நாற்று (மாத சஞ்சிகை).



■ பொற்காலம் வண்ணக் கலையகம்.



■ அருச்சுனா புகைப்படக் கலையகம்.



■ ஒளிநிலா திரையரங்கு.



■ புலிகளின் குரல் வானொலி.



■ தமிழீழ வானொலி.



■ தமிழீழ தேசியத் தொலைக்காட்சி.



■ பல சமூக செய்தி இணையத் தளங்கள்.



■ தமிழீழ இசைக்குழு.



■ காலணி (பாதணி உற்பத்தி மையம்)



■ சேரன் உற்பத்திப் பிரிவு.



■ சேரன் வாணிபம்.



■ சேரன் சுவையகம்.



■ சேரன் வெதுப்பகம்.



■ சேரன் அரைக்கும் ஆலை (அரிசி உற்பத்தி).



■ பாண்டியன் உற்பத்திப் பிரிவு.



■ பாண்டியன் சுவையூற்று.



■ பாண்டியன் பல்பொருள் வாணிபம்.



■ சோழன் தயாரிப்புகள்.



■ பொன்னம்மான் உரைவகை வாணிபம்.



■ தென்றல் இலத்திரனியலகம்.



■ தமிழ்மதி நகை மாடம்.



■ தமிழ்நிலா நகை மாடம்.



■ தமிழரசி நகை மாடம்.



■ அந்திவானம் பதிப்பகம்.



■ இளந்தென்றல் குடிவகைப் பிரிவு.



■ இளவேனில் எரிபொருள் நிலையம்.



■ இளந்தென்றல் தங்ககம் (Lodge).



■ 1-9 தங்ககம் (Lodge)



■ மருதம் வாணிபம்.



■ மருதம் புலால் விற்பனை நிலையம் (மாமிசம்).



■ மரமடுவம் (காட்டுமரங்கள், விறகுகள் விற்பனைப் பகுதி).



■ கேடில்ஸ் தும்புத் தொழிற்சாலை.



■ மாவீரர் அரங்குகள்.



■ மாவீரர் நினைவு விளையாட்டு அரங்குகள்.



■ மாவீரர் நினைவு வீதிகள்.



■ மாவீரர் நினைவு குடியிருப்புத்திட்டங்கள்.



■ மாவீரர் போராளிகள் குடும்பநலன் காப்பகம்.



■ மாவீரர் நினைவுப் பூங்காக்கள்.



■ மாவீரர் நினைவுப் படிப்பகங்கள்.



■ மாவீரர் நினைவு நூலகங்கள்.



■ மாவீரர் நினைவு விலங்கியல் காப்பகம்.



■ மாமனிதர் விருதுகள் (சமூக, பொதுத் தொண்டுகள் செய்வோருக்கானது)



இது தவிர இரணைமடு அறிவியல் நகரில் புதிதாக உருவாக்கப்பட்டுக் கொண்டிருந்த தமிழீழ பல்கலைக் கழகம் இறுதி யுத்தத்தினால் கைவிடப்பட்டுள்ளது. இன்னும் பெயர் தெரியாத நிறைய அமைப்புக்கள்.



உலகில் வாழும் எந்தவொரு விடுதலை அமைப்பும் விடுதலைப் புலிகளைப் போல் தங்கள் தேசத்திற்கென “தேசிய மலர்”, “தேசிய மரம்”, “தேசியப் பறவை”, “தேசிய விலங்கு” போன்ற தேசியச் சின்னங்களை வைத்துக் கொண்டதில்லை.



எந்த நாட்டு உதவிகளையும் நம்பாமல், தன் சொந்த மக்களின் பலத்தை நம்பியே போராட்டத்தை ஆரம்பித்தார், தலைவர் பிரபாகரன்! இன்று தலைவர் பிரபாகரன் அவர்களையும், போராளிகளையும் “தீவிரவாதிகள்” என்று வாய் கிழிய கத்தி கொச்சைப்படுத்தி விமர்சனம் செய்து கொண்டிருக்கும் சில விசமிகளிடம் நான் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன்…!



விடுதலைப் புலிகள் தீவிரவாத இயக்கம் என்றால்…. எவ்வாறு மக்களின் பலமும், பேராதரவோடும் மக்களுக்கான உள்கட்டுமானங்களை உருவாக்க முடிந்தது? உலகில் வாழும் எந்தவொரு விடுதலை அமைப்புக்களும் இவ்வாறான உள்கட்டுமானங்களை உருவாக்கிய சரித்திரம் உண்டா..?



சிங்கள அரசாங்கம் தமிழ்க் குழந்தைகளை அனாதையாக்கியது! பிரபாகரன் அவர்கள் அந்தக் குழந்தைகளுக்குத் தந்தையானார். அப்படித்தான் செஞ்சோலை, காந்தரூபன் அறிவுச்சோலை, செந்தளிர் இல்லம், இனிய வாழ்வு இல்லம் உருவாகியது!



சிங்கள அரசாங்கமானது ஒவ்வொன்றுக்கும் தடைபோட்டு நசுக்கிப் பறிக்கப் பறிக்க… தலைவர் பிரபாகரன் அவர்கள் ஒவ்வொன்றையும் பாதுகாக்க பல அமைப்புக்களை உருவாக்கினார். அவைகள்தான் மேற்குறிப்பிட்ட மக்களுக்கான உள்கட்டுமான அமைப்புக்கள். இவர்தான் உங்கள் பார்வையில் தீவிரவாதியா?



மக்களுக்கான கட்டமைப்புக்கள் ஒருபுறமிருக்க…. இராணுவக் கட்டமைப்புக்களைப் பாருங்கள்…



தரைப்படைகள்
-------------------------



■ இம்ரான் பாண்டியன் படையணி.



■ ஜெயந்தன் படையணி.



■ சார்லஸ் அன்ரனி சிறப்புப் படையணி.



■ கிட்டு பிரங்கிப் படையணி.



■ குட்டிச்சிறி மோட்டார் படையணி.



■ இராதா வான்காப்பு படையணி.



■ சிறப்பு உந்துகணை செலுத்திப் படையணி.



■ விக்டர் கவச எதிர்ப்புப் படையணி.



■ சோதியா சிறப்புப் படையணி.



■ மாலதி சிறப்புப் படையணி.



■ அன்பரசி படையணி.



■ ஈருடப் படையணி.



■ குறி பார்த்துச் சுடும் படையணி.



■ சிறுத்தைப் படையணி.



■ எல்லைப்படை,



■ துணைப்படை,



■ பொன்னம்மான் கண்ணிவெடிப் பிரிவு.



■ ஆயுதக்களஞ்சிய சேர்க்கைப் பிரிவு.



■ பாதுகாவலர் பிரிவு.



■ முறியடிப்புப் பிரிவு.



■ கப்டன் முகிலன் நீண்ட தூர விசேட வேவு ரோந்து அணி.



■ ஆழ ஊடுருவும் படையணி.



■ உந்துருளிப் படையணி



கடற்படைகள்.
----------------------



■ கங்கை அமரன் நீரடி நீச்சல் பிரிவு.



■ கடல் வேவு அணி.



■ சார்லஸ் சிறப்பு அணி.



■ அங்கயற்கண்ணி ஆழ்கடல் நீச்சல் அணி (பெண்கள்).



■ சுலோஜன் ஆழ்கடல் நீரடி நீச்சல் அணி (ஆண்கள்).



■ கடற்சிறுத்தை சிறப்பு அணி.



■ சங்கர் படையணி.



■ வசந்தன் படையணி.



■ சேரன் படையணி.



■ பாக்கியன் ஆழ்கடல் தாக்கும் படையணி.



■ வான்படை.



■ கரும்புலிகள்.



■ புலனாய்வுத்துறை.



■ வெளியகப் புலனாய்வுப் பிரிவு.



■ உள்ளகப் புலனாய்வுப் பிரிவு.



■ படையப் புலனாய்வுப் பிரிவு (MI)



■ தேசியப் புலனாய்வுப் பிரிவு



■ வேவுப் பிரிவு.



■ களமுனை முறியடிப்புப் பிரிவு.



■ களமுனை மருத்துவப் பிரிவு.



■ கணினிப் பிரிவு.



■ பொறியியல் பிரிவு.



■ விசேட வரைபடப் பிரிவு.



■ அரசியல் துறை, 



■ பரப்புரைப் பிரிவு, 



■ கொள்கை முன்னெடுப்புப் பிரிவு.



■ தமிழீழ படைத்துறைப் பள்ளி.



■ ஆயுத உற்பத்திப் பிரிவு.



■ மின்னணுவியல் சிறப்பு உதவிப் பிரிவு.



■ மாவீரர் பணிமனை.



இப்படியானதொரு இராணுவக் கட்டமைப்பை உலகில் எந்த விடுதலை இயக்கமும் கொண்டு வந்ததில்லை! ஆரம்பத்தில் உருவாகும்போது “விடுதலைப் புலிகள்” என்ற அமைப்பாகத்தான் இருந்தார்கள். காலங்களாகி வளர வளர மக்களின் பேராதரவினாலும், மக்களின் முழுப் பலத்தினாலும் “தேசிய இராணுவமாக” வளர்ந்து, ஒரு தேசத்தையே உருவாக்கினார்கள். ஆரம்ப காலங்களில் விடுதலைப் புலிகள் அமைப்பாக இருந்தாலும், இடைப்பட்ட காலங்களில் முப்படைகளையும் கொண்டு ஒவ்வொரு படையணிகளுக்கும் தனித்தனி சீருடையுடன் ஒரு தேசிய இராணுவமாக உலக நாடுகளின் இராணுவங்களுக்கு ஒப்பாக இருந்தார்கள்.



எல்லா நாடுகளிடமும் முப்படைகள் இருந்தது, விடுதலைப் புலிகளிடம் ஒரு படை அதிகமாகவே இருந்தது. அந்த வீரமிக்க படைதான் “கரும்புலிகள்”! உலகில் எந்த நாடுகளிடமும் இல்லாத உயரிய ஆயுதமான, எந்தவிதமான ஆயுதங்களாலும் வெற்றி கொள்ளமுடியாத, எந்தவிதமான ஆயுதங்களோடும் ஒப்பிட முடியாத உயிராயுதமான “கரும்புலிகள்” விடுதலைப் புலிகளிடம் இருப்பது அவர்களுக்கு சிறப்பையும், அதிக பலத்தையும் கொடுத்திருந்தது.



அந்தச் சின்னஞ்சிறிய தேசத்தில் இருந்த விடுதலைப் புலிகளின் படைகளுடன் மோத துணிச்சல் இல்லாத சிங்கள தேசம்தான், முப்பதிற்கு மேற்பட்ட உலக நாடுகளுடன் சேர்ந்து மோதி வெற்றி கண்டதென மார்தட்டிக் கொண்டு திரிகிறது! தமிழர்கள் கவலைப்பட வேண்டிய நேரம் இதுவல்ல…. ஒரு சின்னஞ்சிறிய தேசத்தில் எந்தவித உதவிகளும் இல்லாதிருந்த ஒரு மக்கள் படையுடன் முப்பதிற்கும் மேற்பட்ட உலக நாடுகள் மோதுகின்றன என்றால்… அங்கே தமிழனின் வீரம் எத்தகையது என்பதை ஒவ்வொரு தமிழனும் உணரவேண்டும். அங்கு தமிழனுக்குத்தான் வெற்றி கிடைத்துள்ளது!.



இன்றைய இருபத்தியோராம் நூற்றாண்டில் உலக அரங்கில் தமிழனின் உண்மையான வீரம்தான் முன்னிலை வகிக்கிறது. உலக சரித்திரத்தில் தமிழனுக்கென்று ஒரு குணம், தமிழனுக்கென்று ஒரு வீரம் அழியாமல் இடம் பிடித்துள்ளது! இதை யாராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது! இவ்வாறு தமிழர்களின் வீரத்தை உலக வரலாற்றில் பதிய வைத்த விடுதலைப் புலிகளா… தீவிரவாதிகள்?



தன் சொந்த நாட்டு சிறுபான்மை இன மக்களை, பல நாட்டுப் படைகளோடு உலகில் உள்ள சகல கொடிய ஆயுதங்களாலும் கொன்று குவித்ததால், அது தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்கிறது சிங்கள அரசாங்கத்துடன் சேர்ந்து பயங்கரவாதம் புரியும் வல்லரசுகள்!. அதே சிறுபான்மை இன மக்கள் அரச பயங்கரவாததிற்கு எதிராக உயிர்ப் பாதுகாப்புச் சுதந்திரம் வேண்டிப் போராடினால்; அவர்களைத் “தீவிரவாதிகள்” என்கிறது பயங்கரவாதம் புரியும் மானம் கெட்ட வல்லரசுகள்!.



ஒரு மக்கள் விடுதலைப் போராட்டத்தை “தீவிரவாதம்” “தீவிரவாதம்” என்று சொல்லிச் சொல்லியே நசுக்கிய சர்வதேச நாடுகளே…!



■ கணவனைக் கட்டி வைத்து கணவன் கண் முன்னே மனைவியானவளை கதறக் கதற கூட்டமாக கற்பழித்துக் கொன்று விட்டு, பின் கணவனையும் கொன்று புதைப்பதுதான்… உங்கள் ஜனநாயகமா?



■ ஆண் பிள்ளைகளையும், பெண் பிள்ளைகளையும் நிர்வாணமாக்கி, கூடவே தாய் தகப்பனையும் நிர்வாணமாக்கி ஒவ்வொருவர் கண் முன்னாலேயே ஒவ்வொருவரையும் கூட்டாகச் சேர்ந்து மாறி மாறி கற்பழித்தும், கட்டிவைத்தும் சுட்டுக் கொல்வதுதான்…. உங்கள் ஜனநாயகமா?.



■ பால்குடி பிஞ்சுகளை தாயிடமிருந்து பிரித்து, தாயைக் கற்பழித்துக் கொன்றுவிட்டு அந்தப் பிஞ்சுகளை அனாதையாக்கி தெருத் தெருவாக அலையவிடுவதுதான்…. உங்கள் ஜனநாயகமா?



■ மட்டக்களப்பில் வயதிற்கு வந்து ஒரு வாரமே ஆன பதின்மூன்று வயதுச் சிறுமி புனிதவதியை ஏழு சிங்கள இராணுவ காட்டுமிராண்டிப் படைகள் தாயின் முன்னே கதறக் கதற கற்பழித்து அந்தச் சிறுமியை சித்தப் பிரமையாக்கியதுதான்…. உங்கள் ஜனநாயகமா?



■ இதேபோல் யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவி கிருசாந்தியை கற்பழித்துக் கொன்று புதைத்ததுதான்…. உங்கள் ஜனநாயகமா?



■ சமாதான காலத்திலே மன்னார் வங்காலையில் அதிகாலை ஒரு வீட்டிற்குள் புகுந்த சிங்களக் காட்டுமிராண்டிப் படைகள் அங்கே குடும்பத்தோடு தூங்கிக் கொண்டிருந்த இளம் தாயை கற்பழித்துக் கொன்று விட்டு, தந்தையையும் கொலை செய்து விட்டு, அவர்களின் இரண்டு பிஞ்சுப் பாலகர்களையும் உயிரோடு தூக்குக் கயிற்றிலே தொங்க விட்டு கொலை செய்வதுதான்….. உங்கள் ஜனநாயகமா?



■ வள்ளிபுனத்திலே 53 செஞ்சோலை பாடசாலைப் பிஞ்சுகளை வானத்தில் இருந்து விமான மூலம் குறி தவறாமல் வேண்டுமென்றே குண்டு வீசி சதைப் பிண்டங்களாக… துண்டு துண்டுகளாக சிதைத்துக் கொன்று குவித்து இரத்தத்தில் குளிக்க வைத்ததுதான்…. உங்கள் ஜனநாயகமா?



■ சுற்றிவளைப்பு என்ற பெயரில் சிங்களப் படைகள் கிராமங்களுக்குள் புகுந்து பல பெண்களின் கற்பை சூறையாடி அவர்களின் உயிர்ப்பையினை நிரப்பி… அப்பன் பெயர் தெரியாத குழந்தைகளைக் கொடுத்தும், பருவமாகத பள்ளிச் சிட்டுக்கள் முதல் பால் மடி வற்றிப்போன வயதான பெண்கள் வரை காமக்குருடர்கள் போல் அவர்களைப் பிடித்து கூட்டத்தோடு தெரு நாய்களைப்போல் மாறிமாறி கற்பழித்து கொன்று விட்டு மலசல கழிவுத் தொட்டிகளுக்குள்ளும், பாழாங் கிணறுகளுக்குள்ளும் மூழ்கடித்து முகவரி தெரியாமல் அழித்துத் தொலைப்பதுதான்… உங்கள் ஜனநாயகமா?



■ வல்வைப் படுகொலைகள் , சாவகச்சேரிப் படுகொலைகள், அளவெட்டிப் படுகொலைகள், அல்லைப்பிட்டிப் படுகொலைகள், மண்டைதீவுப் படுகொலைகள், குமுதினிப்படகுப் படுகொலைகள், சத்துருக்கொண்டான் டிப்போ படுகொலைகள், நவாலிப் படுகொலைகள், நாகர்கோவில் பாடசாலை படுகொலைகள், பொத்துவில் படுகொலைகள், கொக்கட்டிச்சோலைப் படுகொலைகள், சம்பூர் படுகொலைகள், வீரமுனைப் படுகொலைகள் மற்றும் கிழக்கு மாகாணப் படுகொலைகள் என்று எண்ணற்ற படுகொலைகளை ஊர் ஊராக… கிராமம் கிராமமாக… தெருத் தெருவாக தமிழர்களைப் பிடித்து துடிக்கத் துடிக்க கொன்று குவித்து மண்ணுக்குள் உரமாக்கியதுதான்… உங்கள் ஜனநாயகமா?



■ உயிரற்ற உடலைக்கூட விட்டு வைக்காமல் கற்பழித்து விட்டு, பின் அந்த உயிரற்ற உடலின் அந்தரங்க உறுப்புக்களை வெட்டியும், சிதைத்தும் அலங்கோலமாக்குவதுதான்….. உங்கள் ஜனநாயகமா?



■ இறுதி யுத்தத்தில் பாதுகாப்பு வலயத்திற்குள் வரவழைத்து எரிகுண்டுகளையும், நச்சுக் குண்டுகளையும் போட்டு கூண்டோடு துடிக்கத் துடிக்க கொன்று குவிப்பதுதான்…. உங்கள் ஜனநாயகமா?.



■ உயிரைப் பாதுகாக்க பதுங்கு குழிக்குள் ஒழிந்தவர்களையும், இந்த உலகை பார்க்கும் முன்னே தாயின் கருவறைக்குள் பிஞ்சுக் குழந்தைகளையும் கொன்று புதைப்பதுதான்….. உங்கள் ஜனநாயகமா?



■ இறுதி யுத்தத்தில் கைதான பொதுமக்களை போராளிகள் என்ற பெயரில் விசாரணை என்று அழைத்துச் சென்று ஆண்களை கொலை செய்து மூடி மறைத்தும்… பெண்களை கூட்டத்தோடு கற்பழித்து, சிலரை கொலை செய்தும், வேறு பலரை கட்டாய விபச்சாரியாக்கி விலை பேசி விற்றுத் தீர்த்ததுதான்…. உங்கள் ஜனநாயகமா?



■ கைது செய்து கொலை செய்த ஆண்களின் மனைவிமாரிடம், அவர்கள் கணவர்மார்கள் உயிரோடு இருப்பதாக அவர்களின் பெயரைச் சொல்லி இன்றும் கூட காமவித்தைகளை அரங்கேற்றி விளையாடிக் கொண்டிருப்பதுதான்… உங்கள் ஜனநாயகமா?



■ ஈழத்தமிழன் ஒழிந்துகொள்ள இடமேதுமில்லாமல் அலைந்து அலைந்து இறுதியில் நிராயுதபாணிகளாக அரச படைகளிடம் அடைக்கலமாக அவர்களை வயது வித்தியாசமின்றி கொன்று குவித்து களைத்துப் போய் முடியாமல் காயப்பட்டவர்களையும், கையில் அகப்பட்டவர்களையும் செத்த பாம்பினைப் போல் கைகளைக் கட்டி வரிசையாக தெருக்களில் விறகுபோல் அடுக்கி வைத்து கவச வாகனங்களால் மிதித்து துடிக்கத் துடிக்க சாகடித்தீர்களே…. இதுதான் உங்கள் ஜனநாயகமா?



இப்படியாக….



மேற்கண்ட கொடுமைகள் எல்லாவற்றையும் தாங்கிக் கொள்ள முடியாத மக்கள், தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஆயுதம் ஏந்தி போராடி தங்களை தற்காத்துக் கொண்டால்…. அவர்கள் உங்கள் பார்வையில் தீவிரவாதிகளா?



அவ்வாறெனில்….



உங்கள் பார்வையில் விடுதலைக்காக ஆயுதம் வைத்துப் போராடும் மக்கள் “தீவிரவாதிகள்” என்றால்…. கொடிய ஆயுதங்களை வைத்து மக்களை அநியாயத்திற்கு கொன்று குவிக்கும் அரசாங்கம் “தீவிரவாத அமைப்பாகத்” தெரியவில்லையா?



மாறாக… விடுதலைப்புலிகள்



ஒரு சிங்களப் பெண்ணைக் கற்பழித்திருந்தாலோ…..



சிங்கள மக்களைக் கொன்று குவித்திருந்தாலோ….



அல்லது, வேறு சில அமைப்பினர்போல் நிராயுதபாணிகளாக செய்தி சேகரிக்கச் சென்ற ஒவ்வொரு பத்திரிகையாளர்களையும் பிடித்து தலைகளை தனியாக அறுத்தெடுத்து படம் பிடித்துக் காட்டியிருந்தாலோ….



நீங்கள் சொல்லலாம், அவர்கள் பயங்கரமான தீவிரவாதிகள் என்று..!



எது ஜனநாயகம்….? எது தீவிரவாதம்….? யார் தீவிரவாதி….? யார் ஜனநாயகவாதி….?



அப்படி, அவர்கள் என்ன செய்தார்கள்…?



தங்கள் இனத்தை அழித்து மக்களை கொன்று குவித்து வரும் அரச படைகளை மட்டுமே எதிர்த்துப் போராடினார்கள். இவர்கள்தான் உங்கள் கண்களுக்கு “தீவிரவாதிகளாக” தெரிகிறார்களா?



உரிமைகள் மறுக்கப்பட்டு, உணர்வுகள் நசுக்கப்படும் போது, அங்கே தீவிரவாதம் வளர்ந்தே தீரும்! இங்கு “தீவிரவாதம்” என்ற சொற்பதம் “சுதந்திர விடுதலையை” தீவிரமாக வேண்டி நிற்கும் தீவிரவாதமே!!!



தீவிரவாதிகள் என்று சித்தரிக்கப்பட்டு விமர்சிக்கப்படும் விடுதலைப் புலிகள் என்ன, வானத்தில் இருந்து குதித்து வந்தவர்களா? அந்த அரச பயங்கரவாத அடக்குமுறைகளால் ஒடுக்கப்பட்ட மக்கள்தான், தங்கள் உயிர்ப் பாதுகாப்புச் சுதந்திரம் வேண்டி விழிப்படைந்து, எழுச்சியடைந்து விடுதலைப் புலிகளாகத் திருப்பித் தாக்கினார்கள். அந்த மக்கள்தான் விடுதலைப் புலிகள்! விடுதலைப் புலிகள்தான் அந்த மக்கள்!



விடுதலைப் புலிகள் தீவிரவாதிகள் என்றால்….
- M.E.A. Karan

No comments:

Post a Comment